சர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது

சர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது
இந்தியாவில் உள்ள சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை, கடந்த பத்தாண்டுகளில் ஏறத்தாழ இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. இந்த அளவுக்கு, நீரிழிவு உலகத்தின் தலைமையகமாகவே மாறிவிட்டது நம் நாடு. 20 வயதிலேயே நீரிழிவுப் பரிசோதனைகளைத் தொடங்க வேண்டிய கட்டாயத்துக்குள், நாம் இப்போது தள்ளப்பட்டு விட்டோம். மரபியல் காரணங்களைத் தாண்டி, நமது வாழ்க்கைமுறையை மாற்றுவதன் மூலமே, இந்த அசுர வேகத்தைக் குறைக்க முடியும். நீரிழிவாளர்கள் மட்டுமல்ல... அவர்களின் குடும்பத்தினரும் - ஏன் நாம் ஒவ்வொருவருமே - இக்குறைபாடு பற்றி தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். நீரிழிவு பற்றி அறிவதன் மூலமே, அதைக் கட்டுப்படுத்த முடியும்... தள்ளிப் போட முடியும்... தடுக்கவும் முடியும்.
உலகில் ஒவ்வொரு ஆண்டும் எய்ட்ஸ் அல்லது மார்பகப் புற்றுநோயினால் இறப்பவர்களைக் காட்டிலும், நீரிழிவு சார்ந்த பிரச்னைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்கிறது ஓர் அதிர்ச்சிப் புள்ளிவிவரம். காரணம்... இது பற்றிய அறியாமைதான். அதோடு, தவறான எண்ணங்களும், சுய மருத்துவமும் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன. இச்சூழலில் நீரிழிவு பற்றிய அத்தனையையும் அலசும் ஒரு நூலுக்கு மிகுந்த அவசியம் உள்ளது. டாக்டர் கு.கணேசனின் கடின உழைப்பில் உருவாகியுள்ள இந்நூலை ‘நீரிழிவு என்சைக்ளோபீடியா’ என்றே நீங்கள் கூறுவீர்கள். அப்படியொரு முழுமையான மருத்துவக் களஞ்சியமாகவே படைக்கப்பட்டுள்ள இந்நூல் மிகத் துல்லியமானது. எளிய, இனிய நடையில் எழுதப்பட்ட மகத்தான மருத்துவ வழிகாட்டி!.