அளவீடற்ற மனம்

அளவீடற்ற மனம்
வாழ்க்கையை நடத்திச்செல்ல, நம்மிடம் இருக்கும் ஒரே கருவி எண்ணம் மட்டும் என்றும், அது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், பன்னெடுங்காலமாய் கருதப்படுகிறது. உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட அக்கருத்தை, முற்றிலுமாக தகர்த்தெறிகிறார் கிருஷ்ணமூர்த்தி. தனி நபருக்குள் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமே, பெருங்குழப்பத்தை எண்ணம் விளைவிக்கிறது என்று அவர் எடுத்துரைக்கிறார். வாழ்வின் வளங்களைப் பெறுவதில், எண்ணம் மனிதனுக்குப் பெருமளவில் உதவுகிறது என்பதில் சந்தேகமேதும் இல்லை. நடைமுறை வாழ்க்கையில் எண்ணத்திற்கு உரிய இடம் உள்ளது. ஆனால், உளவியல் பிரச்சனைகளுக்கு எண்ணம் பெற்றுத்தரும் தீர்வுகள், பிரச்சினைகளை மேலும் பன்மடங்காக்குகிறது.
வன்முறை முரண்பாடு, மனக் காயங்கள், பாதுகாப்பின்மை, பயம், துக்கம், களிப்பு போன்ற உணர்வுகளே நம் செயல்பாடுகளின் அடித்தளமாய் அமைந்துள்ளன. இவ்வுணர்வுகளையும், அவற்றின் வெளிப்பாட்டினால் உண்டாகும் பிரச்சினைகளையும் கையாள எண்ணத்திற்கு ஆற்றல் இல்லை என்பதை இந்நூலில் கிருஷ்ணமூர்த்தி நன்கு விவரிக்கிறார். வேறுபட்ட சூழ்நிலையில் நிகழ்பவை மூலமாக, எண்ணமே பிரச்சினைகளை உருவாக்கியும், அவற்றை தொடரச் செய்வதையும் நிருபிக்கிறார். பிரச்சினைகளை எதிர்கொள்ள எண்ணத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்ட உபகரணம் எதாவது இருக்கிறாத என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார். புது தில்லி, கல்கத்தா, மதராஸ் மற்றும் பம்பாய் ஆகிய இடங்களில் அக்டோபர் 1982-க்கும் ஜனவர் 1983-க்கும் இடைப்பட்ட நாட்களில் அவர் நிகழ்த்திய பேச்சுகள் இந்நூலில் வெளியிடப்பட்டுள்ளன. ‘நெஞ்சத்தினுள் இருக்கும் மனம்’ எனும் அருமையான கண்ணோட்டத்தையும் அவர் இந்நூலில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.